வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள்... நெல்லை அருகே அதிர்ச்சி

வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள்... நெல்லை அருகே அதிர்ச்சி

பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் 6 பேர் மீது நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பாளையங்கோட்டை மட்டுமில்லாமல் அருகே உள்ள மேலப்பாளையம், சமாதானபுரம், தச்சநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1100 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவது போன்ற வீடியோ காட்சி இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் மாணவிகள் வட்டமாக அமர்ந்து மது அருந்தும் காட்சி பதிவாகி உள்ளது. மேலும் அவர்கள் கொஞ்சமும் பயம், கூச்சம் இல்லாமல் சியர்ஸ் என சொல்லிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மது அருந்துகின்றனர். அதில் சில மாணவிகள், 'எனக்கும் வேண்டும்' என கேட்டு வாங்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாளையங்கோட்டை பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மது அருந்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகமும் விசாரணையில் இறங்கியது.

பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில் 6 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கண்டறியப்பட்ட 6 மாணவிகளையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேப்போல் அரசு சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. வகுப்பறையில் மது அருந்தும் அளவுக்கு மாணவிகளுக்கு தைரியம் வந்தது எப்படி? மாணவிகளின் நடவடிக்கையை ஆசிரியர்கள் கண்காணிக்க தவறியது ஏன்? பள்ளி நேரத்தில் தான், அவர்கள் இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது பள்ளி முடிந்த பின்பு சம்பவம் நடைபெற்றதா? என, பல்வேறு விஷயங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை என்பது, தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கல்லூரி மற்றும் பள்ளிகளும் இங்கு செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் பாளையங்கோட்டை பள்ளி மாணவிகள் வகுப்பறையில் வைத்தே மது அருந்திய சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.