“சிபிஐ மிரட்டலால் என்டிஏவில் அன்புமணி, தினகரன்” - மாணிக்கம் தாகூர் எம்.பி.

“சிபிஐ மிரட்டலால் என்டிஏவில் அன்புமணி, தினகரன்” - மாணிக்கம் தாகூர் எம்.பி.

சிபிஐயால் மிரட்டப்பட்டு அன்புமணி, டிடிவி.தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறினார்.

மதுரை திருநகரில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ல் அடிக்கல் நாட்டிய பிரதமர் நிதி தராததால், இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இதனால்தான் மதுரையில் பிரதமர் மோடியின் கூட்டத்தை நடத்தாமல் சென்னைக்கு மாற்றியுள்ளனர். தமிழக மக்களை மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.

என்டிஏ கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரை இணைத்தது சிபிஐ தான். டிடிவி.தினகரன், அன்புமணி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு உள்ளது. இவர்கள் அமைத்த கூட்டணிக்கு என்டிஏ என பெயர் வைக்காமல் சிபிஐ என வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். இந்த கூட்டணி மூன்றாவது இடம்பெறவே தட்டுத் தடுமாறும் நிலை உள்ளது. பாஜகவுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக் கேட்டுளளனர். இதைப் பற்றி வெளியில் பேசக்கூடாது எனக் கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் பிடித்தவர்களுக்கும். பிடிக்காதவர்களுக்கும் பார்த்து சின்னம் ஒதுக்குகின்றனர். ஒருகாலத்தில் சின்னத்தை பார்த்து மக்கள் வாக்களித்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. சின்னத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சினையில் பிரதமர் தவறான கருத்துகளை சொல்லி வருகிறார். அவரது பேச்சை முருகப்பெருமானே மன்னிக்க மாட்டார்.

தேர்தலின்போது மட்டுமே பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மீது பாசம் வரும். என்டிஏ கூட்டணி என்பது உடைந்த பானை. அந்த பானையை தற்போது ஒட்ட வைத்துள்ளனர். அந்தக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை. மக்களின் ஆதரவு வேறு யாருக்கு போயுள்ளது என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும். சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.