தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.2,113 கோடி விடுவிக்கவில்லை: பேரவையில் முதல்வர் விமர்சனம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்துக்குத் தரவேண்டிய ரூ.2,113 கோடியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசினர் தனித் தீர்மானத்தை பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தமிழகத்தில் பாகுபாடின்றி செயல்படுத்தப்படுகின்றன.
ஆனால், எந்தத் திட்டமானாலும், பணிக்கு ஏற்ப உரியநிதியை விடுவிக்காமல் தாமதம் செய்து, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2025-26-ல் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்துக்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
அதேபோல, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர்நீர் திட்டத்தில் ரூ.3,112 கோடி, பிரதமர் கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் தரப்படவில்லை. இதனால், தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் வாழும் எளிய மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள விபி-ஜி ராம் ஜி எனும் மத்திய அரசின் புதிய திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
ஏற்கெனவே இருந்த 100 நாள் வேலை திட்டத்தால் தமிழகத்தில் ஆண்டுதோறும் 74 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். இதில் 85 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் ஆவர். ஊரகவேலை உறுதித் திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும். வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிசெய்ய வேண்டும்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இதுபற்றி பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேச வேண்டும். பேசுவார் என நம்புகிறேன். இவ்வாறு தனித்தீர்மானம் மீது முதல்வர் ஸ்டாலின் பேரவையில் பேசினார்.
இதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), பாபு (விசிக), சின்னப்பா (மதிமுக),ஜி.கே.மணி (பாமக), ஈஸ்வரன் (கொமதேக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), சின்னத்துரை (மார்க்சிஸ்ட் கட்சி), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் தீர்மானத்தை வரவேற்று உரையாற்றினர்.
அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் காலத்துக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது. வேலை நாட்கள் எண்ணிக்கையும் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் முழுவதும் ரத்து செய்யப்படுவது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. தனிப்பட்ட அரசியல் காரணங்களால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.