வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்... நன்றி தெரிவித்த அஜித் அணி!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவரது வாழ்த்துக்கு அஜித் குமார் ரேசிங் அணி நன்றி தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற க்ரெவென்டிக் 24ஹெச் ஐரோப்பியன் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் சீரிஸ் 2025 (Creventic 24H European Endurance Championship Series 2025) கார் பந்தயத்தில், நடிகர் அஜித் குமார் தலைமையிலான குழு பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், அஜித் குமாரின் குழுவுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
அந்த பதிவில், ''நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', க்ரெவென்டிக் 24ஹெச் ஐரோப்பியன் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் சீரிஸ் 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும் - அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் SDAT லோகோ பயன்படுத்தியதற்கு நன்றி!
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோ-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்” என அந்த பதிவில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துக்கு அஜித் குமார் ரேசிங் அணி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ''தமிழ்நாடு துணை முதலமைச்சர், SDAT தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு அஜித் குமார் ரேசிங் அணி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. உங்களது தொடர் ஆதரவு, ஊக்கம் எங்களுக்குத் தேவை. உயரிய இலக்குகளை நோக்கி அஜித் மற்றும் அவரது அணி முழு முயற்சியுடன் பயணிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.