திருவண்ணாமலையில் அனுமதியின்றி மலையேறிய சீரியல் நடிகர், நடிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் அவரது வருங்கால கணவர் அருண் ஆகியோர் தடையை மீறி திருவண்ணாமலை தீப மலை மீது ஏறி வீடியோ பதிவிட்ட நிலையில், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு பிறகு, அந்த மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை அர்ச்சனாவும் அவரது வருங்கால கணவரான நடிகர் அருணும் தீப மலை மீது ஏறியுள்ளனர். மேலும் இதுகுறித்து அர்ச்சனா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு, வீடியோ, புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
அவரது பதிவு அதிகம் பகிரப்பட்ட நிலையில் தடையை மீறி திருவண்ணாமலை மலை மீது ஏறியதாக மாவட்ட வனத்துறையினர் அர்ச்சனா மற்றும் அருணை நேரில் அழைத்து 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது தடை விதிக்கப்பட்டிருப்பது தங்களுக்கு தெரியாது என இருவரும் கூறியதாக தெரிகிறது . இந்நிலையில் அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர். அபராத தொகையை செலுத்திய பின்னர் அவர்கள் வனத்துறை அலுவலகத்தில் இருந்து சென்றனர்.