''கல்வி தான் வாழ்க்கையில் மிக முக்கியம்'' - கல்லூரி மாணவர்களிடையே நடிகர் ஆனந்தராஜ் பேச்சு
கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆனந்தராஜ், ''கல்வி தான் வாழ்க்கையில் முக்கியம்'' என்று பேசினார்.
நடிகர் ஆனந்தராஜ் கதாநாயகனாகவும், பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா கதாநாயகியாகவும் நடித்து ஶ்ரீகாந்த் தேவா இசையில் நவம்பர் 14ம் தேதி ''மதராஸ் மாஃபியா கம்பெனி'' திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
ஏ.எஸ். முகுந்தன் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஒன்றாக ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் ஆனந்தராஜ், நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா, பாடலாசிரியர் மு.கார்த்திக், இயக்குநர் முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
அப்போது திரைப்படத்தின் முக்கிய பாடலை மேடையிலேயே இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசைத்து காட்டினார். இதனைத் தொடர்ந்து அந்த பாடலுக்கு கல்லூரி மாணவ, மாணவியருடன் படக்குழுவினர் நடனமாடி உற்சாகமூட்டினர். இதைத் தொடர்ந்து மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட படக்குழுவினர் படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சி மேடையில் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் வரும் அம்மா பாடலை பாடி இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மாணவர்களை நெகிழ செய்தார். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும்படியும் தொடர்ச்சியாக ஆல்பம் தயாரிக்க உள்ளதால் இயக்குநர், பாடலாசிரியர், நடிகர், நடிகைகள் என விருப்பம் உள்ள விஸ்காம் மாணவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தார்.
நடிகை சம்யுக்தா பேசும்போது, ''நீங்கள் இருக்கும் கல்லூரி வாழ்க்கை தான் மிக மிக சிறந்த வாழ்க்கை. தற்போது தேர்வு பிரச்சினை, காதல் பிரச்சனை என இருக்கும். இந்த வாழ்க்கை முடிந்து வெளியே வந்தால் இந்த வாழ்க்கையே பெரிது என தோன்றும். ஆண்களை விட பெண்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த சிரமங்கள், போராட்டங்கள் இருக்கின்றன. நமது ஆசையை நிறைவேற்ற வீட்டில் போராட்டம், சமூகத்தில், உறவினர்கள் மத்தியில் போராட்டம். இதை எல்லாம் கடந்து வருவதே பெண்களுக்கு பெரிய வெற்றியாக இருக்கிறது.'' என்று கூறினார்.
நடிகர் ஆனந்தராஜ் பேசும்போது, ''நடிகை சம்யுக்தா கூறியது போன்று கல்லூரி காலத்தில் பெரிய பிரச்சினையாக இருப்பது காதல். அப்படி எனக்கு வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று நடந்ததே இல்லை. நான் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும்போது முதலில் இசையமைப்பாளர் தேவாவை ஒப்பந்தம் செய்து விட்டு பின்னர் என்னை ஒப்பந்தம் செய்யுங்கள் என கூறினேன்.
என் ஆஸ்தான இசையமைப்பாளர் தேவா தான். இரண்டாவது இன்னிங்ஸ் கதாநாயகனாக துவங்கி உள்ள எனக்கு அவரது மகன் இசையமைக்கிறார் என்பது பெருமையாக உள்ளது. கல்லூரிக்கு கல்வி கற்க வருகிறோம். கல்வி தான் வாழ்க்கையில் மிக முக்கியம்'' என தெரிவித்தார்.
பின்னர் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இப்பொழுது வரும் படங்களில் என்ன கருத்து உள்ளது? 'மதராஸ் மாஃபியா கம்பெனி' திரைப்படம் மனிதன் எப்படி வாழக்கூடாது? என்பதை வைத்து நல்ல கருத்துடன் வெளியாக உள்ளது. என்னுடன் திரைப்படம் செய்த ஹீரோக்கள் சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் ஏன் அரவிந்த்சாமி கூட வில்லனாக நடித்து விட்டார்.
வில்லனாக நடித்த நான் கதைக்கு ஏற்றார் போல ஹீரோவா மாறிவிட்டேன். அனைவரும் பியூர் வில்லன்களாக மாறிவிட்டார்கள். நான் காமெடி கலந்த வில்லனாக மாறி இருக்கிறேன். ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவில்லை. சுந்தர் சி இயக்கும் நடிகர் ரஜினி நடிக்கும் புதிய திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்." என்றார்.
நடிகை சம்யுக்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், '' இந்த படம் அனைத்து விதமான கதை காலத்தையும் கொண்டது. அனைவருக்கும் பிடிக்கும் வகையான திரைப்படமாக அமையும். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது குறித்த கேட்கிறீர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதே இல்லை என்றார்.