ஒருநாள் தொடரை வெல்வது யார்? - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரு அணிகள் இடையே ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் 1-1 என சமநிலையை அடைந்தது.
இந்நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ள 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.
இதற்கு பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படாததே காரணம். அதேவேளையில் ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரும் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்தினால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பு கைகூடும்.
பேட்டிங்கில் விராட் கோலி அசுர பார்மில் உள்ளார். தொடர்ச்சியாக இரு சதஙக்ள் விளாசி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இதேபோன்று கடந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட்டும் மீண்டும் ஒரு ரன்வேட்டையில் ஈடுபட முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் ரோஹித் சர்மாவும் தனது பங்களிப்பை வழங்குவதில் முனைப்பு காட்டக்கூடும்.
மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரு ஆட்டங்களிலும் முறை 18, 22 ரன்களில் ஆட்டமிழந்தார். விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு விக்கெட்டை பறிகொடுப்பதை ஜெய்ஸ்வால் வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி வருகிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 30 முறை ஆட்டமிழந்துள்ளார். இதற்கான தீர்வை அவர், கண்டுபிடிக்க முயற்சிக்கக்கூடும்.