ரெட் அலர்ட் என்றால் என்ன..? எவ்வளவு மழை பெய்யும்?
பருவமழைக் காலங்களில் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளில் ஒன்று அலர்ட். அதிலும் ரெட் அலர்ட், ஆம்பர் அலெர்ட், யெல்லோ அலெர்ட் என வகை வகையான அலெர்ட்டுகளை கவனிக்கிறோம். இந்த நிற அலர்ட்டுகள் குறித்தும், அவை விளக்கும் சூழல் நிலை குறித்தும் இந்த கட்டுரையில் காண்போம்.
எச்சரிக்கை உணர்வைத் தூண்டும் எந்த குறியீட்டையும் அலர்ட் என்று சொல்லலாம். அந்த வகையில் வானிலை குறித்த எச்சரிக்கை உணர்வை மக்களிடம் தூண்டுவதற்கு இந்த அலர்ட் முறை பயன்படுகிறது. நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து அவை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வண்ணங்கள் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றன.
யெல்லோ அலர்ட்- கனமழை, மிக கனமழை
மோசமான வானிலை இருக்கும் தருவாயில் இந்த யெல்லோ அலர்ட் (மஞ்சள் எச்சரிக்கை) விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சாதனங்கள், மின்னிணைப்புக் கசிவு போன்றவற்றின் மீது கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு அலர்ட்- மிக மிக கனமழை
ஆம்பர் அலர்ட் என்பதுதான் சரியான பெயர். அது ஆரஞ்சு நிறம் போல இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் என்று புரிதலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், ஆரஞ்சு நிறம் ஆரஞ்சுப்பழம் பிரபலமான பின்னரே 'ஆரஞ்சு' என்றானது. அதுக்குமுன் ஆரஞ்சு நிறம் செம்மஞ்சள் ( Geoluread ) எனப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவற்றை ஏற்படும் அளவுக்கு மோசமான நிலையில் வானிலை இருக்கும் போதுதான் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் போது, பயணம் செய்வது உள்ளிட்ட புறவெளி வேலைகளை மக்கள் தவிர்க்கவேண்டும்.
ரெட் அலர்ட்- அதி கனமழை
எச்சரிக்கைக் குறியீடுகளில் அபாயத்தை உணர்த்தும் குறியீடு இது. மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மட்டுமே ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்களுடைய உயிர் மற்றும் உடைமைகளை பார்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு என, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான உச்சகட்ட எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ஆம்பர் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் தேவைகளுக்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு, கவனமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமுமாக இருக்கிறது.
மழை அளவு (24 மணி நேரத்தில்)
யெல்லோ அலர்ட் - 7 செ.மீ முதல் 11 செ.மீ மழை வரை மழை
ஆரஞ்சு அலர்ட் - 12 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டர் வரை மழை
ரெட் அலர்ட் - 21-25 செ.மீ-க்கு மேல் கனமழை பெய்யும். (சில நேரம் 30 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும்)