சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விரையும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை!
ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 60 வீரர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. ஐப்பனை தரிசிக்க கார்த்திகை, சித்திரை, விசு உள்ளிட்ட மாதங்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். குறிப்பாக கார்த்திகை மாதம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு இதே சமயத்தில், சபரிமலையில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டத்தால் போக்குவரத்து காவல் துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் பணியை மேற்கொண்டவர்கள் கடும் சவால்களை சந்திக்க நேர்ந்தது.
இதனை கருத்தில் கொண்டு ஐயப்பன் கோயில் தேவசமும், கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை வைத்ததன் பேரில், கமாண்டண்ட் அகிலேஷ் குமார் உத்தரவின்பேரில் ஆய்வாளர் பிரதேஷ் தலைமையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 4ஆம் படை அணியிலிருந்து 60 வீரர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் நேற்று சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இரண்டு குழுவினரும் பம்பை நதி பகுதி, சன்னிதானம் மற்றும் மலையோரப் பாதைகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சூழ்நிலையில், அதில் யாத்திரிகர்கள் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும், உடனடி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதையும் இவர்கள் உறுதி செய்வர்.
மேலும், பக்தர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படும் பட்சத்தில், உடனடி மருத்துவ முதலுதவி அளிக்கும் வகையில் சிறப்பு பயிற்சிப்பெற்ற மருத்துவ மற்றும் மீட்புப்படை வீரர்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்த குழுவிற்கு ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், கயிறுகள், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. சபரிமலை யாத்திரை காலத்தில், பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்து தரிசனம் செய்வதை உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இவர்கள் எடுப்பார்கள் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பெண் பக்தர் மரணம்
நேற்றைய தினம் கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும்போது அப்பாச்சி மேடு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உடனடியாக, அவருடன் வந்த சக பக்தர்கள், ஆம்புலன்ஸ் உதவிக் கோரி பம்பாவில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டதாக தெரிகிறது. ஆனால், தங்களுக்கு எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை என்று உயிரிழந்த பெண்ணுடன் வந்தவர்கள் ஆதங்கம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடதக்கது.