பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி பேட்களை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
மாதவிடாய் ஆரோக்கியம் ஓர் அடிப்படை உரிமை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் இலவசமாக சானிட்டரி பேட்களை பள்ளிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் பள்ளி செல்லும் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் கடந்த டிச.10, 2024-ல் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறைகள் வழங்கப்பட வேண்டும்.
கழிப்பறைகள் மற்றும் சானிட்டரி பேட்கள் வழங்குவதை உறுதிப்படுத்த அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த வசதிகளை தனியார் பள்ளிகள் வழங்கத் தவறினால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.