எடப்பாடி பழனிசாமி யாராவது கூட்டணிக்கு வருவார்களா என்று காத்திருக்கிறார் - செல்வப்பெருந்தகை கிண்டல்

எடப்பாடி பழனிசாமி யாராவது கூட்டணிக்கு வருவார்களா என்று காத்திருக்கிறார் - செல்வப்பெருந்தகை கிண்டல்

 எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு யாரவது வருவார்களா என
விரக்தியின் விளிம்பில் காத்திருக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கிண்டலாக கூறினார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் கடந்த 10ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தங்களது விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை வழங்கினர்.

 கடைசி நாள் என்பதால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் ராஜேஷ் குமார் மீண்டும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்ப மனுவை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது அகில இந்திய தலைமையில் புகார் அளித்துள்ளோம். எனவே காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களை தோழமை கட்சிகள் பெரிதுப்படுத்த வேண்டாம்.இதனால் யாருக்கும் நன்மை கிடையாது, சங்கடத்தை தான் ஏற்படுத்தும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது என கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல் எந்த சலசலப்பும் கிடையாது. இந்தியா கூட்டணி சமுத்திரம் போன்றது. இதில் சில அலைகள் வரலாம், போகலாம். கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது.

இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஸ்டாலின் போன்ற திறமையான பைலட்கள் உள்ளனர். கூட்டணி வலுவாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு யாராவது வருவார்களா என விரக்தியின் விளிம்பில் காத்திருக்கிறார். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. யாரும் கூட்டணியை உடைக்க முடியாது. திமுக கூட்டணி ஜனநாயகமானது, அதில் கருத்துரிமை இருப்பதால் அனைவரும் பேசுகின்றனர். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் சிறு கல் எரிந்தாலும் திமுக கூட்டணி தோழமை கட்சிகள் எதிர்வினை ஆற்றுவோம்" என்று செல்வப்பெருந்தகை பதிலளித்தார்.