ரஞ்சி கோப்பை: சர்பராஸ் கான் இரட்டை சதம் விளாசல்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 87 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சர்பராஸ் கான் 142, ஹிமான்ஷு சிங் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 123.2 ஓவர்களில் 560 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அபாரமாக விளையாடிய சர்பராஸ் கான் 219 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 227 ரன்கள் விளாசி ரக்சன் ரெட்டி பந்தில் ஆட்டமிழந்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய சுவேத் பார்கர் 98 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ரக்சன் ரெட்டி 4, ரோஹித் ராயுடு 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அபிராத் ரெட்டி 4, அமன்ராவ் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். ராகுல் சிங் 82, கோடிமேலா ஹிமதேஜா 40 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.