டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ ரெய்டு
டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில், விசாரணையின் மையப்புள்ளியாக அல் பலாஹ் பல்கலை உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அல் பலாஹ் மருத்துவ பல்கலையைச் சேர்ந்தவர்கள் ஆவர். குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ அதிகாரிகள் விடா முயற்சியாக உள்ளனர். இந்நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காஷ்மீரின் புல்வாமா, ஷோபியன் மற்றும் குல்காம் மாவட்டங்களில் 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருந்த, பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.