கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டெடுப்பு; வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை
திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம் வழியாக கூவம் பாய்கிறது. இன்று அதிகாலையில் கூவம் ஆற்றின் கரையோரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி (30) சென்றபோது சாமி சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகே சென்று பார்த்தபோது 10க்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதை கண்ட முனுசாமி இதுகுறித்து கிராமத்தினருக்கு தகவல் அளித்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் பொது மக்கள் விரைந்து வந்து கூவம் ஆற்றில் இறங்கி தேடத் தொடங்கினர். அப்போது விநாயகர், முருகன், ஐயப்பன், பைரவர், நாரதர், நாகம்மன், வாசுகி உள்பட 50க்கும் மேற்பட்ட சாமி கற்சிலைகளை கண்டெடுத்தனர். இதன் பிறகு மீட்கப்பட்ட கற்சிலைகளை ஆற்று பகுதியில் வரிசைப்படுத்தி வைத்தனர்.
கூவம் ஆற்றில் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவலறிந்ததும் பிஞ்சிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்து பார்வையிட்டுச் சென்றனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் எஸ்.பாலாஜி மற்றும் கடம்பத்தூர் காவல் நிலைய போலீசார், வருவாய்த் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் அனைத்து சிலைகளையும் மீட்டு திருவள்ளூர் தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். மேலும், இது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே பிஞ்சிவாக்கம் கிராம மக்கள், ''இந்த சிலைகளை எங்களது கிராமத்திற்கே தர வேண்டும்'' என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், ''அலுவலகத்திற்கு வந்து கடிதம் எழுதிக் கொடுங்கள், மாவட்ட கலெக்டரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆற்றுப் பகுதியில் தடுப்பணை இருப்பதால் சிலைகள் தண்ணீரில் அடித்து வர வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேப் போல் சில சிலைகள் சேதமடைந்து காணப்படுவதால் யாரேனும் எடுத்து வந்து இங்கு போட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.