''கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முயலும் சூழ்ச்சிக்கு யாரும் பலியாகக்கூடாது'' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கூட்டணியில் குழப்பம் விளைவிக்க நினைப்பவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை திராவிடப் பொங்கல் என்று சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதை கட்டளையாக ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் முன்னெடுத்த திராவிடப் பொங்கல் கொண்டாட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. திமுக சார்பில் செய்யப்பட்ட கொண்டாட்டங்களுடன், அரசு சார்பில் நாம் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், மக்களின் மகிழ்ச்சியை இரு மடங்கு ஆக்கியிருக்கிறது.
பொங்கல் கொண்டாட்டம் முடிந்து எல்லோரும் ரெஸ்ட் இல்லாமல் தேர்தல் பணிக்கு தயாராக வேண்டும். இன்றைய ஆளுநர் உரையில் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை தலைப்பு செய்திகளாக சொல்லியிருக்கிறோம். இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால் தான் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள்.
உண்மையான பிரச்சினைகள் பெரிதாக இல்லாததால் வீண் அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்ப நினைக்கிறார்கள். அதற்கு நாம் துளிகூட இடம் கொடுத்து விடக் கூடாது. அதனால் தான், நம் சாதனைகளை எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனி நபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம் அரசின் திட்டங்களால் சுமார் 2 கோடி மக்கள் பயனடைகிறார்கள். ஒரு குடும்பம் விடாமல் எல்லோரும் நம் திட்டங்களால் பயனடைய வேண்டும் என பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
அந்த பயனாளிகள் எல்லோரையும், இனிமேல் நம்முடைய வாக்காளர்களாக உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து BLO 2-க்களை வைத்து, மண்டல அளவில் பெரிய கூட்டங்களை நடத்தினோம். கடந்த தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்றோம். அதன்பிறகு, BLC-களை நியமிக்கும் பணிகளை தொடங்கி நூறு வாக்காளர்களுக்கு ஒருத்தர் என்று BLC-களை நியமித்துள்ளோம். அடுத்து இப்பொழுது, 4 மண்டலங்களிலும் அவர்களை திரட்டி மாநாடு நடத்தப் போறோம். இதுவே ஒரு மண்டலத்துக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு பெரிய மாநாடுகளாக இருக்கும்.
நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். தேர்தல் நெருங்கி விட்டது. இனி நம் சிந்தனை, செயல் எல்லாவற்றிலும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். இங்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். தேர்தல் வருகிறது. நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று மட்டும் நினைக்காதீர்கள். தனி நபர்களை விட கட்சி தான் பெரிது. அதே மாதிரி, எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.
களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளை சொன்னால் பொறுமையாக பதில் அளிக்க வேண்டும். உங்கள் முகத்தில் தப்பித்தவறி கூட, கோபமோ , ஆணவமோ, அதிருப்தியோ வெளிப்படக் கூடாது. அதே போல, நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒரு சிலர் இருக்கத் தான் செய்வார்கள். அவர்கள், தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகிடக் கூடாது. தெளிவாகச் சொல்கிறேன்.
கூட்டணி, தொகுதி பங்கீடு இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எந்த தொகுதியில் யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நான் தான் களம் காண்பதாக நினைத்து 100 சதவீத உழைப்பைக் கொடுத்து களப்பணி ஆற்ற வேண்டும். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். உட்கட்சி பிரச்சினைகள் எதுவும் எழக் கூடாது. எல்லோரையும் அரவணைத்துப் போக வேண்டிய பொறுப்புகளில் இங்கு இருக்கும் எல்லாரும் இருக்கிறீர்கள்.
இந்தியாவிலேயே ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மிகவும் உறுதியாக, வலிமையாக இருப்பது நாம் தான் என்று எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. அதனால் நம்மை எப்படியாவது வீழ்த்திட பல சதித் திட்டங்கள் நடக்கும். அதை எல்லாவற்றையும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உடைத்து, ஒரு வலிமையான கட்சியாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த 3 மாதத்துக்கு உங்கள் உழைப்பு, பொறுமை எல்லாம் ரொம்ப முக்கியம். உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன். நம்மை நம்பித் தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.