'அந்த குழந்தைக்கு நான் தான் தந்தை என டிஎன்ஏ டெஸ்ட்டில் தெரிந்தால்...' மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை!

'அந்த குழந்தைக்கு நான் தான் தந்தை என டிஎன்ஏ டெஸ்ட்டில் தெரிந்தால்...' மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை!

ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு நான் தான் தந்தை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் (DNA Test) அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி பின்னர் துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டிய நிலையில், மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோரிடம் மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.

குறிப்பாக நேற்று (நவ.04) ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ், என்னைக் காதலித்து திருமணம் செய்ததையும், இந்தக் குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக் கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதற்கு மறுப்புத் தெரிவித்து ரங்கராஜ் ஒரு விரிவான அறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ''மகளிர் ஆணையத்தில் நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு போதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன்.

ஜாய் கிரிசில்டா எனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால் இந்த திருமணம் நடந்தது. செப்டம்பர் 2025-ல் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புலனாய்வு அதிகாரி முன்பும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலத்தை நான் ஏற்கெனவே அளித்துள்ளேன். இந்த திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒரு போதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் (DNA Test) அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன்.

இந்த வாக்குமூலம் ஏற்கெனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்.

மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்'' என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.