எங்கள் அறிவை பயன்படுத்தி SIR-யை வெல்வோம் - கனிமொழி எம்பி சூளுரை

எங்கள் அறிவை பயன்படுத்தி SIR-யை வெல்வோம் - கனிமொழி எம்பி சூளுரை

எங்களுடைய அறிவை பயன்படுத்தி SIR -யை நாங்கள் வெல்வோம் என திமுக எம்பி கனிமொழி கூறினார்.

திமுகவின் 75- வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞரணி சார்பாக 'திமுக 75 அறிவுத் திருவிழா' எனும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடந்த கருத்தரங்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொது செயலாளருமான கனிமொழி பேசும்போது, '' தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, பல்வேறு கணைகள் நம்மை நோக்கி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

எந்த திசையில் இருந்து திமுகவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று தெரியாத அளவிற்கு, பலமுனை தாக்குதல் நடைபெறுகிறது. அவர்களுடைய ஒரே டார்கெட் திமுகதான். எல்லோருக்கும் பாரம்பரிய எதிரிகள், பரம்பரை எதிரிகள் என்றால் அது திமுக தான்.

காலம் காலமாக எதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டதோ, அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக தான் இந்த திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அறிவை பயன்படுத்தி தான், காலம் காலமாக இருந்த அந்த அடக்கு முறைக்கு எதிராக நாம் போராடினோம்.

அதிகாரத்தை தங்கள் கையில் வைத்து கொண்டிருந்தவர்களை எதிர்த்து போராடக்கூடிய சாதாரண, சாமானிய, ஒடுக்கப்பட்ட மக்கள் கையில் எடுத்த ஆயுதம் அறிவு ஆயுதம் தான். மொழி என்கிற ஆயுதம் தான். அந்த மொழியை தான் இன்று உதயநிதி மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். இந்த திருவிழாவில் முன்னெடுத்திருக்கிறார்.

அறிவுத் திருவிழாவை ஏன் நடத்துகிறோம்? என்று யோசித்தபோது, தற்போது அறிவு தேவைப்படுகிறது. நிலாவிற்கு முதலில் சென்றவர் யார்? என மாணவர்களிடம் கேட்டபோது, நீல் ஆம்ஸ்ட்ராங் என சரியான பதில் கூறியுள்ளனர். ஆனால், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர், ''நிலாவுக்கு முதலில் அனுமன்'' சென்றார் என அறிவியலை தவறாக கூறினார். இது போன்றவர்களுக்கு தற்போது அறிவு தேவைப்படுகிறது.

இந்தியாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் அறிவித்திருக்கிறார்கள். 15 நாள் தான் பார்லிமென்ட் என்று தெரிவித்து இருக்கிறார்கள். மத்திய அரசுக்கு எந்த விவாதமும் பிடிக்காது, ஒரு மாதம் நடத்த வேண்டிய குளிர் கால கூட்டத்தொடர் 15 நாட்கள் தான் நடைபெற இருக்கிறது. ஏனென்றால், மத்திய அரசுக்கு விவாதத்தில் நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு எதிராக மறுபடியும் நாம் கையில் அறிவு என்ற ஆயுதத்தை எடுக்க வேண்டும்.

SIR -யை வைத்து பீகாரை ஏமாற்றலாம், ஹரியானாவை ஏமாற்றலாம், மகாராஷ்டிராவில் ஏமாற்றலாம். தமிழ்நாட்டில் அது நடக்காது. அறிவை பயன்படுத்தி நாங்கள் வெல்வோம். எங்களுக்கு களத்தில் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தல், எஸ்ஐஆர் என ஒரு புறம் இருந்தாலும், நாங்கள் அறிவை வளர்க்கிறோம் என இந்த திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கின்ற திமுக இளைஞர் அணி உதயநிதிக்கு எங்களுடைய வாழ்த்துகள்'' என தெரிவித்தார்.