''SIR ஐ எதிர்ப்பது ஏன்?'' - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் விளக்கம்

''SIR ஐ எதிர்ப்பது ஏன்?'' - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:

திமுகவின் தொடர் எதிர்ப்பை மீறி SIR பணி தொடங்கிவிட்டது. நிறைய மக்களுக்கு SIR பற்றி முழுவதுமாக தெரியவில்லை. இந்நிலையில் SIR ஐ திமுக ஏன் எதிர்க்கிறோம்? என விளக்கவும், வாக்குரிமையை எப்படி பாதுகாத்துக்கொள்வது என வழிகாட்டவும் தான் இந்த வீடியோ. சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் போதுமான கால அவகாசம் தராமல், தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பது தான் நம்முடைய நிலைப்பாடு.

தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பாஜக எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது? என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கி இருக்கிறார். கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா கூட SIR ஐ தீவிரமாக எதிர்க்கிறார்கள். நாமும் SIR அறிவித்தபோதே இது சதி என்று எதிர்த்தோம். கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசினோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம். வரும் 11 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறோம்.

அதற்கு முன்பாக SIR க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்திலேயே எத்தனை பிரச்சினைகள், குழப்பங்கள் இருக்கிறது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இதோ எனக்கு கூட இந்த எனுமரேஷன் ஃபார்ம் கொடுத்து இருக்கிறார்கள். உங்களில் சிலர் கையிலும் இந்த ஃபார்ம் இந்த நேரம் வந்து சேர்ந்திருக்கும். இதில் முதலில் நம்முடைய விவரங்களை கேட்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக முந்தைய வாக்காளர் திருத்த பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டிருக்கிறது. உறவினர் என்றால் யார்? அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? யார்? அனைவரும் தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள்.

இதில் தெளிவு இருக்கிறதா? வாக்காளரின் உறவினர் பெயர் என சொல்லப்பட்டிருக்கும் இடத்தில் முதலில் பெயரும், பிறகு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் கேட்கப்பட்டு இருக்கிறது. மூன்றாவதாக மீண்டும் உறவினர் பெயர் என கேட்கப்பட்டு இருக்கிறது. முதலில் யாருடைய பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா? அல்லது உறவினர் பெயரா? சிறு தவறு இருந்தால் கூட தேர்தல் ஆணையம் அந்த படிவத்தை ஏற்றுக்கொள்ளாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் ஆபத்து இருக்கிறது.

நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. நன்றாக படித்த, பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் அவர்களுக்கு தலை சுற்றிவிடும். படிவத்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு, 'தற்போதைய புகைப்படத்தை ஒட்டவும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. மாநில தேர்தல் ஆணைய அதிகாரி என்ன சொல்கிறார்? “உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒட்டலாம்” என அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இது இன்னொரு சிக்கல். ஒருவேளை போட்டோ ஒட்டவில்லை என்றால், என்ன நடக்கும்? வாக்குரிமை பறிக்கப்படுமா? பறிக்கப்படாதா? தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி, அதாவது ERO கையில் தான் முடிவு இருக்கிறது.

இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பார்கள் என சொல்ல முடியாது. இவ்வாறு முதல் கோணல்.. முற்றிலும் கோணல் என்ற கதையாக அனைத்து இடத்திலும் குழப்பம். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில அதிமேதாவிகள் 'SIR பணியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள் தானே? பிறகு ஏன் திமுக எதிர்க்க வேண்டும்?” என்று புரிதலற்ற உண்மைக்கு புறம்பான விவரங்களை வைத்து பேசுகிறார்கள்.

ஒரு பணியாளரை தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே அவர் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டுத்தான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார். மக்களை திசை திருப்பினால் போதும் என தவறான தகவலை பரப்ப கூடாது. ஏதாவது பொய் சொல்லி SIR ஐ எப்படியாவது நடத்தலாமா? ஏழை எளிய மக்களின் வாக்குரிமையை நீக்கலாமா? என எதிர்க்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது. SIR தொடங்கிய நாளில் இருந்து களத்தில் இருக்கும் கழகத்தினரும் நிறைய பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு வந்தபடி இருக்கிறார்கள். BLOக்கள் வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் போதிய அளவில் கணக்கீட்டு படிவம் கொண்டு வருவதில்லை. ஒரு நாளைக்கு 30 படிவங்களுக்கு மேல் தருவதில்லை.

இந்த லட்சணத்தில் ஒரு தொகுதியின் ERO மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை இத்தனை குறுகிய கால அவகாசத்தில் எவ்வாறு கொடுத்து வாங்குவார்? வாங்கினால் வேலை முடிந்ததா? அதுவும் இல்லை. அதை கணினி மயமாக்கி வரும் டிசம்பர் 7ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் எவ்வாறு இதை எல்லாம் செய்து முடிக்கப் போகிறார்கள்? என்று தோன்றுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருவது போல அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் இதன் மூலம் உறுதியாகிறது.

BLOக்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை என்றால் SIR பணியே மொத்தமாக பாதிப்பை சந்திக்கும். BLO க்களும், கட்சிகளின் BLA2க்களும் இணைந்து செயல்பட தேவையான அனைத்தையும் செய்வோம் என்று தேர்தல் ஆணையம் சொன்னார்கள். அவ்வாறு சொன்னார்களே தவிர அப்படி ஒரு சூழலை இதுவரை உருவாக்கவே இல்லை. திமுக BLA2 தயாராக இருந்தாலும் கூட பல இடங்களில் BLOக்கள் வராமல் இருக்கின்றார்கள். இதையெல்லாம் மீறி தான் நம்முடைய செயல்வீரர்கள் விழிப்பாக செயல்பட்டு வருகிறார்கள். “உங்களது வாக்கு நீக்கப்படுமா?” என்று கேட்டால் அவ்வாறு ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது, இல்லை என்று சொல்லி விட முடியாது.

அதை தடுக்க வேண்டும் என்றால் உங்கள் பகுதிக்கு உரிய BLO யார்? என்று கேட்டு அவரிடம் இருந்து கணக்கீட்டு படிவத்தை வாங்கி சரியாக நிரப்பி திரும்ப சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஒப்புகை சீட்டையும் மறக்காமல் வாங்க வேண்டும். இது தான் உங்களின் வாக்குரிமையை பாதுகாக்கும். வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் மறுக்க முடியாத, அடிப்படையான உரிமை. தற்போதைய நிலையிலான SIR ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. இதை எதிர்கொள்ள திமுக சார்பில் உதவி மையம் அமைத்து இருக்கிறோம். இது, திமுகவினருக்கு மட்டும் அமைத்திருக்கும் உதவி மையம் இல்லை. அனைவருக்குமானது.

திமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் SIR ஆல் பாதிக்கப்படும் அனைத்து பொதுமக்களும் நாங்கள் அறிவித்திருக்கும் 08065420020 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காக்க திமுக துணைநிற்க தயாராக இருக்கிறது. நமது வாக்குரிமையை பறிக்கும் ஆபத்து வாசல் தேடி வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். SIR இன் சதிவலையில் சிக்காமல் நம்முடைய வாக்குரிமையை நிலைநாட்டுவோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.