ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் 22,000 வாக்காளர்கள் நீக்கம்: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் 22,000 வாக்காளர்கள் நீக்கம்: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

 ஆத்தூர் தொகுதில் ஒரே இரவில் 22,000 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

அம்பேத்கரின் 70-வது நினைவு தினத்தையொட்டி, இன்று (டிச.6) திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் இ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன். திண்டுக்கல்லில் தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை சேர்ப்பதற்கு பதிலாக, ஒரே அறையில் இருந்து பெயர்களை நீக்கி விட்டனர். ஆத்தூர் தொகுதியில் இடமாற்றம் எனக்கூறி 22,000 பேரை நீக்கியுள்ளனர். அவர்கள் பெயரை சேர்ப்பதாக திண்டுக்கல் ஆட்சியர் கூறியிருக்கிறார். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நடக்கட்டும், என்ன செய்ய முடியும்.

குறிப்பாக, திண்டுக்கல்லில் உள்ள திமுக பிரமுகர் முருகானந்தம் என்பவரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள்.

எஸ்ஐஆர் பணிக்காக ஊழியர்கள் எங்குமே செல்லவில்லை. அவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே விண்ணப்பங்களை நிரப்பிவிட்டு ஏதோ கணக்கு காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்காக வேலை செய்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை. ஒரு நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இல்லை. இதற்கு சட்டமே வழிவகுத்து உள்ளது. உங்களுடைய உரிமை பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம் என கூறியுள்ளது. அதனால் தான் நாங்கள் சென்று உள்ளோம், என்றார்.