“உதிர்ந்த செங்கற்கள்...” - ஓபிஎஸ், தினகரன் குறித்து ஜெயக்குமார் கருத்து
“அதிமுக ஒரு கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். உதிர்ந்த செங்கற்களை பற்றி கவலை இல்லை” என்று ஓபிஎஸ், டிடிவி தினகரன் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி, சென்னை - மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தற்போது பழனிசாமி தலைமையில் அதிமுக ஒரு வலிமையான இரும்புக் கோட்டையாக திகழ்கிறது. கட்டி முடிக்கப்பட்ட கோபுரமாக இருந்து வருகிறது.
இதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் உதிர்ந்த செங்கற்கள் மட்டுமே. உதிர்ந்த செங்கற்களை பற்றி கோபுரத்துக்கு எந்த கவலையும் இல்லை. யாராலும் இந்த கோட்டையின் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.
ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்த முடிவுகளை கட்சியின் பொதுச் செயலாளர் தான் எடுப்பார். அவர் எடுத்துள்ள நிலைப்பாடுகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அது அவருடைய கருத்து. அதற்கு பழனிசாமி உரிய நேரத்தில் பதிலளிப்பார்” என்று அவர் கூறினார்.