யூடியூபில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது; உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு
யூ-டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூ-டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும்.
அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.
பல்வேறு யூ டியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, நீதிபதி என் செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், சரவணன் ஆகியோர், "இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும், ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றியும் பயன்படுத்தி வணிகரீதியில் வருவாய் ஈட்டுகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, " அவரது பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர், "இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிகரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர். இது அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதி இன்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துவதாகவும், சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது" எனவும் வாதிட்டார்.
இளையராஜா தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், சேனல்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.