அந்த காலத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்திய ‘தாஸி அபரஞ்சி’

அந்த காலத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்திய ‘தாஸி அபரஞ்சி’

பு​ராண, சரித்​திரக் கதைகள் அதி​கம் உரு​வான ஆரம்​பக் கால​கட்ட சினி​மா​வில் சில திரைப்​படங்​கள், பெண்​களை மையப்​படுத்​தி​யும் பாலியல் சார்ந்த விஷ​யங்​களைக் கொண்​டும் உரு​வாகி இருக்​கின்​றன. அதில் ஒன்​று, ‘தாஸி அபரஞ்​சி’. தேவ​தாசிபெண்​ணுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து உரு​வான இந்​தப் படம் அந்த காலத்​திலேயே சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. கூட​வே, சில பத்​திரி​கைகள் இதைத் துணிச்​சலான படம் என்​றும் பாராட்​டின.

விக்​கிர​மா​தித்​தன் என்ற மன்​னன் உஜ்ஜைனி​யில் ஆட்சி புரி​கிறார். அங்​குள்ள மகத​புரி எனும் ஊரில், பேரழகுகொண்ட அபரஞ்சி என்ற தேவ​தாசி வாழ்​கிறார். 64 கலைகளி​லும் தேர்ச்​சிப் பெற்ற அவர், தன்​னைப் பற்​றிய பெருமை கொண்​ட​வ​ராக இருக்​கிறார். தன்னை யாராவது மனதள​வில் நினைத்​தால் கூட ஆயிரம் பொற்​காசுகளைக் கூலி​யாகக் கேட்​பவர். ஆனால், அதிக பக்திகொண்ட அவர் கைலாசம் செல்ல வேண்​டும் என்று இறைவனை நினைத்து தின​மும் பிரார்த்​தனை செய்​கிறார்.

மன்​னன் விக்​கிர​மா​தித்​தன் ஆறு மாதம் காட்​டில் தியானம் செய்​வதை வழக்​க​மாகக் கொண்​ட​வன். அவனுடன் அமைச்​சர் விஜயனும் ராணி பத்​மாவ​தி​யும் செல்​கிறார்​கள். நய வஞ்​சக​னான விஜயனுக்கு நாட்​டின் மீதும் ராணி பத்​மாவதி மீதும் ஆசை இருக்​கிறது. மன்​னனுக்​கும் விஜயனுக்​கும் அதிசயக் கலை ஒன்று தெரி​யும். அது மற்​றொரு​வர் உடலுக்​குள் கூடு பாய்​வது.

ஒரு​நாள் விஜயன், ஒரு கிளியைக் கொன்​று​விட்​டு,போலி​யாக அழுகிறான். அதைப் பார்த்து மனம் இளகும் மன்​னன், தன் உடலை விட்​டு, கிளிக்​குள் புகுந்து அதற்கு உயிர்​கொடுக்​கிறான். இதைப் பயன்​படுத்​திக் கொள்​ளும் விஜயன், ராஜா​வின் உடலுக்​குள் புகுந்​து, அவர் உரு​வத்​தில் அரண்​மனைக்​குத் திரும்​பு​கிறான்.

ராஜா​வின் உயிர், கிளிக்​குள் இருக்​கிறது. அந்​தக் கிளியை வேட்​டைக்​காரன் பிடித்​து, பணக்​காரரும் பஞ்​சா​யத்​துத் தலை​வரு​மான தனபாலிடம் விற்​று​விடு​கிறான். இப்​போது, அந்த புத்​தி​சாலி கிளி, தனபாலுக்கு வரும் வழக்​கு​களைத் தீர்ப்​ப​தில் உதவு​கிறது. சிக்​கலான வழக்​கு​களுக்​கும் எளி​தாகத் தீர்வு சொல்​கிறது.

ஒரு​நாள் ஒரு விசித்​திர வழக்கு வரு​கிறது இவர்​களிடம். அதாவது, ஏழை பூசாரி ஒரு​வருக்​குப் பேரழகி​யான அபரஞ்சி மீது ஆசை வரு​கிறது. ஆனால் கூலி கொடுக்க முடி​யாத ஏழை அவர். ஒரு வசிய மருந்து தயாரித்து வேலைக்​காரி மூல​மாக அபரஞ்​சி​யிடம் கொடுக்க ஏற்​பாடு செய்​கிறார். ஆனால், அந்த வேலைக்​காரப் பெண், அதை தான் சாப்​பிட்டு விடு​கிறார்.

இதற்​கிடையே அபரஞ்சி தன்​னைத் தேடி வரு​வார் என காத்​திருக்​கும்பூசா​ரி, அவர் வராத​தால் தூங்​கி​விடு​கிறார். பூசா​ரி​யின் கனவில் வரு​கிறார், அபரஞ்​சி. அந்​தக் கனவு பூசா​ரிக்கு உண்​மை​யாகத் தோன்​றுகிறது. அடுத்த நாள் காலை அந்த கனவை நண்​பர்​களிடம் சொல்​கிறார். அதைக் கேட்​கிற அபரஞ்​சி, கனவில் தன்னை நினைத்த​தால் ஆயிரம் பொற்​காசுகளைக் கேட்​கிறார். பணம் இல்​லாத​தால் பூசா​ரியை, தனபாலிடம் இழுத்​துச் செல்​கிறார் அபரஞ்​சி.

அப்​போது அந்​தக் கிளி அற்​புத​மான தீர்ப்பு ஒன்​றைச் சொல்​கிறது. ஒரு கண்​ணாடியைக் கொண்டு வரச் சொல்​கிறது. அதில் இப்​போது பொற்​காசுகள் பிர​திபலிக்​கின்றன. ‘பூ​சா​ரி, உன்​னைக் கனவில் மட்​டுமே சந்​தித்​தார். அதனால் கண்​ணாடி​யில் பிர​திபலிக்​கும்பொற்​காசுகளைக் கூலி​யாக எடுத்​துக் கொள்’ என்​கிறது அபரஞ்​சி​யிடம். தனக்கு எதி​ராகத் தீர்ப்​பளித்த கிளியைக் கொன்று விடு​வ​தாக சபதம் போடு​கிறார் அபரஞ்​சி.அது நிறைவேறிய​தா? கைலா​யம் செல்ல வேண்​டும் என்ற அவர் கனவு என்​ன​வானது என்​பது கதை.

அபரஞ்​சி​யாக, புஷ்பவல்லி நடித்​திருந்​தார். இவர் ‘சம்​பூர்ண ராமாயணம்’ (1936) படத்​தில் சிறு​வயது சீதா​வாக நடித்து சினி​மா​வில் அறி​முக​மானவர். பின்​னர், மிஸ் மாலினி, சக்​ர​தா​ரி, வேலைக்​காரி மகள் என பல படங்​களில் நடித்​தவர். இவர், காதல் மன்னன் ஜெமினிகணேசனின் 2-வது மனைவியாவார்.

தெலுங்​கிலும் ஏராள​மான படங்​களில் நடித்​துள்​ளார். கொத்​தமங்​கலம் சுப்​பு, ஏழைப் பூசா​ரி​யாக​வும், வேலைக்​காரி சிங்​காரி​யாக எம்​.எஸ்​.சுந்​தரி​பா​யும் மன்​ன​னாக எம்​.கே.​ரா​தா​வும் விஜய​னாக எம்​.ஆர்​.சு​வாமி​நாதனும் நடித்​திருந்​தனர். கொத்​தமங்​கலம் சீனு, புலியூர் துரை​சாமி அய்யா உள்பட பலர் நடித்​தனர்.

பி.என்​.​ராவ் இயக்​கிய இந்​தப் படத்தை ஜெமினி ஸ்டூடியோஸ் சார்​பில் எஸ்​.எஸ்​.​வாசன் தயாரித்​தார். பி.எஸ்​.ரங்கா ஒளிப்​ப​திவு செய்​தார். எம்​.டி.​பார்த்​த​சார​தி, எஸ்​.​ராஜேஸ்வர ராவ் இசை அமைத்​தனர். இப்படத்​தில் நடித்​து, கதை, வசனம், பாடல்​கள் எழு​தி, துணை இயக்​குந​ராக​வும் பணி​யாற்​றி​னார், கொத்​தமங்​கலம் சுப்​பு.

‘காணவேண்​டும் கயிலை​யை...’, ‘ஆசைக் கொள்​ளாதவர் ஆண்​பிள்​ளை​யோ..?’, ‘வேலைக்​கார கேலி பிழைப்​பு’,‘ஆசையா என் மேல் ஆசை​யா?’, ‘ஆசை​யி​னால் வரும் துன்​பம்’ என்​பது உள்பட 15 பாடல்​கள் இடம்​பெற்றன. 1944-ம் ஆண்டு ஆக.10-ல் வெளி​யாகி வெற்றி பெற்றது, இந்​தப் படம். அக்​கால​கட்​டத்​தில்​ சர்ச்​சையையும்​ ஏற்​படுத்​தியது.