'விஜயை சுற்றிலும் சூழ்ச்சி வலை' - முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் பேட்டி
தவெக தலைவர் விஜயை சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக தகவல் தொடர்பாளராக பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இளம்விதவைகள் உருவாவதை தடுக்க சினிமாவில் பல்வேறு கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறிய மறைந்த நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக நடிகரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக தகவல் தொடர்பாளராக பணியாற்றிய பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்தார்.
இதன் பிறகு பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் நான் தற்போது ஒன்றை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். விஜயுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது.
நட்சத்திரம் விஜய் தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால் தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது. இந்த சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜயுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தான் என, எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். அந்த கள்ள நபர்கள் யார்? என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும். மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனி தான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயி தான். அதே போல விஜயை சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது'என்று பி.டி.செல்வகுமார் கூறினார்.