டிட்வா புயலால் 3 பேர் பலி: தமிழக அரசு தகவல்

டிட்வா புயலால் 3 பேர் பலி: தமிழக அரசு தகவல்

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலியானதாகவும், 57 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் சென்னையில் இன்று (நவ.30) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டிட்வா புயல் மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து இறந்தனர். மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். 149 கால்நடைகள் உயிரிழந்தன.

57 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நாகப்பட்டினத்தில் மட்டும் 24 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களும், தஞ்சையில் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களும், மயிலாடுதுறையில் 8000 ஹெக்டேர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் 234 குடிசைகள் சேதமடைந்துள்ளன.

38 நிவாரண முகாம்கள்: தமிழகத்தில் மழை பாதிப்பு அதிகமுள்ள 9 மாவட்டங்களில் 38 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தி அதில் 2300 பேரை தங்க வைத்துள்ளோம்.

புயலின் அடுத்தக்கட்ட தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் புதிய அறிவிப்பு வெளியிடும். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அரசு சார்பாக வெளியிடப்படும் அறிவிப்புகளை மட்டும் பின்பற்ற வேண்டும்