வெள்ளப் பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை

வெள்ளப் பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை

வெள்ளப் பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் இங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படு கிறது. ஏராளமான குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். நேற்று முன்தினம் மழையின் தீவிரம் குறைந்து லேசான மழையே பெய்தது.

நேற்று தென்காசி மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் பலத்த மழைப்பொழிவு இல்லை.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் கடனாநதி அணையில் 25 மி.மீ., ராமநதி அணையில் 10 மி.மீ., குண்டாறு அணையில் 8 மி.மீ., கருப்பாநதி அணையில் 5 மி.மீ., செங்கோட்டையில் 4 மி.மீ., அடவிநயினார் அணையில் 3 மி.மீ., ஆய்க்குடி, செங்கோட்டையில் தலா 2 மி.மீ., சங்கரன்கோவிலில் 1 மி.மீ. மழை பதிவானது.

சங்கரன்கோவில், புதுமனை 4-ம் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் என்பவரது வீட்டின் ஒரு பகுதி மழையில் இடிந்து விழுந்தது. அப்பகுதியில் யாரும் இல்லாததால் சேகர் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

குற்றாலத்தில் குளிக்க தடை: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தடை நீடிக்கும் நிலையில், குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் நேற்று 5-வது நாளாக குளிக்க தடை நீடித்தது. சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.