சோழ, பாண்டிய மன்னர்களை இழிவுபடுத்துவதா? - திருமாவளவனுக்கு அண்ணாமலை கண்டனம்

சோழ, பாண்டிய மன்னர்களை இழிவுபடுத்துவதா? - திருமாவளவனுக்கு அண்ணாமலை கண்டனம்

 சோழ, பாண்டிய மன்னர்களை திருமாவளவன் இழிவுபடுத்துவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் அனைத்துத் தவறுகளுக்கும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளையே நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று மாபெரும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை அவதூறாகப் பேசியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மொழியானது இன்றைய தமிழகத்தின் புவியியல் எல்லைகளைக் கடந்து உலகெங்கும் தழைத்தோங்கக் காரணமாக இருந்தவர்கள் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள். அத்தகைய புகழ் பெற்ற மன்னர்களின் ஆட்சிக்காலத் தைப் பற்றி திருமாவளவன் கூறியிருக்கும் கருத்துகள் மிகவும் ஆபத்தானவை.

இது சோழ மற்றும் பாண்டியர்களின் மரபுக்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகும். ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய பெயர்கள் தமிழ் பெயர்களா என அவர் கேள்வி எழுப்புவாரானால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி, கலாநிதி போன்ற பெயர்கள் தமிழ் பெயர்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.