“எந்த முகத்தை வைத்துக் கொண்டு மோடி இங்கு வாக்கு கேட்டு வருகிறார்?” - ஜோதிமணி எம்.பி.
“தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்கிற பாஜகவை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்கமாட்டார்கள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு நரேந்திர மோடி இங்கு வாக்கு கேட்டு வருகிறார்?” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்கிற பாஜகவை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்கமாட்டார்கள். ஒன்றிய அரசு கொடுக்கிற நிதி எமது மக்களின் வரிப்பணத்தில் 29% மட்டுமே.
அதிலும் இந்தியை திணித்து தமிழை அழிக்க தடையாக இருப்பதால் கல்விக்கு நிதி மறுப்பு. கீழடியில் எமது அடையாளங்களை, தொன்மையை, வரலாற்றுச் சிறப்பை ஏற்க மறுப்பு. இயற்கைச் சீற்றங்களின் போது தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இந்தியாவிலேயே இல்லாததுபோல புறக்கணிப்பு. ஜிஎஸ்டி என்ற பெயரில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலமான தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு.
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் அவமதிப்பு. தமிழ்நாட்டு மக்களின் நலன்காக்கும் மசோதாக்கள் நிறுத்தி வைப்பு. தமிழ்ப் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் தராமல் தமிழ் திரையுலகின் மீது தாக்குதல். இப்படி எமது மக்களுக்கு எதிரான துரோகப் பட்டியலை தொடர்ந்து வாசித்துக் கொண்டே போகலாம்.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு பாஜகவும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்? தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் எங்கள் வாழ்வைப் பிடிங்கி தரையில் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் மட்டும் இங்கென்ன வேலை? டாட்டா பை பை’ எனத் தெரிவித்துள்ளார்.