பாமகவிலிருந்து ஜி.கே. மணியை நீக்கத் திட்டம்?

பாமகவிலிருந்து ஜி.கே. மணியை நீக்கத் திட்டம்?

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, விளக்கம் கேட்டு ஜி.கே. மணிக்கு அன்புமணி தரப்பு பாமக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து பாமக தலைமை நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கடந்த புதன் கிழமை கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணி  அவர்களின் கீழ்க்கண்ட இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.

1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த திசம்பர்  6&ஆம் தேதி தில்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது.

2.    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த 15-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது.

மேற்கண்ட இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில்  இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக தலைவர் பதவி தொடர்பாக அன்புமணி, ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதில் ராமதாஸூக்கு ஜிகே மணி ஆதரவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.