கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்?

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்?

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்யவுள்ள குற்றப்பத்திரிகையில் தவெக தலைவர் விஜய் பெயரும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, கரூர் வேலுச்சாமிபுரம் தொடங்கி தவெக முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, டி.நிர்மல்குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த கடந்த 12 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் சிபிஐ தரப்பில் சொல்லப்பட்டது. அடுத்த நாளே இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராக சிபிஐ தரப்பில் கூறப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு விசாரணைக்கு வருவதாக விஜய் தெரிவித்ததாகவும், சிபிஐ தரப்பு அதனை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று (ஜன 19) இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ தரப்பு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நேற்றே தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தார். இன்று காலை 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்று சொல்லப்பட்ட நிலையில், அரை நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்றார்.

குறிப்பாக, "பரப்புரை வாகனத்தின் மேல் இருந்த நீங்கள் நிலைமை மோசமானதை அறியவில்லையா?", "கூட்ட நெரிசலில் தண்ணீர் பாட்டிலை வீசிய போது நிலைமை குறித்து தெரியவில்லையா? காவல் துறை அளித்த காட்சிகளில் நீங்கள் தண்ணீர் பாட்டில் வீசுவது தெரிகிறதே?, "காவல் துறை தொடர்ந்து பொது அறிவிப்புகளை செய்த வீடியோக்களை அளித்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் தொடர்ந்து பரப்புரை வாகனம் முன்னேறி சென்றது ஏன்?", "பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான உங்களுக்கு எவ்வளவு கூட்டம் கூடுமென தெரியாதா?" என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பரப்புரைக்கு குறிப்பிட்ட நேரத்தை தாண்டி 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? எனக் கேட்டதற்கு, வருகிற வழியில் நிறைய வளைவுகள் இருந்ததால் தாமதமாகிவிட்டதாக விஜய் பதிலளித்த நிலையில், அதற்கான ஆதாரத்தை சமர்பிக்குமாறு சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது. அதில், தவெக தலைவர் விஜய் பெயரும் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.