வைகை அணை நீர் திறப்பு! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணை நீர் திறப்பு! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 ராமநாதபுரம் மாவட்ட விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போகம் பாசனத்திற்காக விநாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வைகை அணையின் பூர்வீக பாசனப் பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மூன்று கட்டமாக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.

தன்படி, முதல் கட்டமாக இன்று (அக்.27) ராமநாதபுரம் மாவட்ட விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் ஏழு பிரதான மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்த நிலையில், அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக பாலத்தில் நடந்துச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை 5 நாட்களில் வைகை அணையில் இருந்து மொத்தமாக 624 மில்லியன் கன அடி தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்துவிடப்பட உள்ளது. தொடர்ந்து அடுத்த கட்டமாக சிவகங்கைக்கும், மதுரை மாவட்டத்திற்கும் தண்ணீர் திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வைகை அணையில் இருந்து மொத்தமாக விநாாடிக்கு 3 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, கால்நடைகளை ஆற்றுப்பகுதியில் மேய்க்கவோ கூடாது என பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.