யாராலயும் தொட முடியாது.. இந்தியாவின் புதிய ரன் மெஷின்.. 63 பந்துகளில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி!

யாராலயும் தொட முடியாது.. இந்தியாவின் புதிய ரன் மெஷின்.. 63 பந்துகளில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி!

 தென்னாப்பிரிக்கா யு19 அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 63 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக 14 வயதிலேயே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மண்ணில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் புதிய சென்சேஷனாக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்து வருகிறார். 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான பின், உலகம் முழுக்க பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதிலும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசியது பலரையும் மிரள வைத்தது.

இதன் மூலமாக பீகாருக்கு புதிய அடையாளமாகவும் வைபவ் சூர்யவன்ஷி மாறினார். தொடர்ந்து இந்திய யு19 அணியில் விளையாடி வந்த வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே 5வது கியரில் ஆடி எதிரணியை துவம்சம் செய்தார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் என்று அனைத்து நாடுகளிலும் சதம் அடித்தார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய யு19 அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. '

ஏற்கனவே முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்ற நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி - ஆரோன் ஜார்ஜ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 24 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதிலும் 7வது ஓவரில் 6,4,6,4 என்று வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் வெளுக்க, இந்திய அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 63 பந்துகளில் சதம் விளாசி சம்பவம் செய்துள்ளார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 25 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்களாக உள்ளது. தென்னாப்பிரிக்கா மண்ணில் சூர்யவன்ஷி அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.