நவீனமயமாகும் உ.பி காவல் துறை: ட்ரோன்கள், டிஜிட்டல் தரவு, ஏஐ-க்கு முதல்வர் யோகி அடித்தளம்!
உத்தரப் பிரதேச காவல் துறை ட்ரோன்கள், டிஜிட்டல் தரவு மற்றும் ஏ.ஐ தொழில்நுட்பங்களுக்கு மாறுவதற்கான அடித்தளத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
உத்தரப் பிரதேச காவல் துறையை முன்மாதிரியாக்கும் முயற்சியில் யோகி அரசு இறங்கியுள்ளது. இதற்காக, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் குற்றப் பகுப்பாய்வு, போலீஸாருக்கான செயலி (யுபிசிஓபி), உள்ளிட்டவை அறிமுகப்படுத்துகிறது.
இதன்மூலம், வெளிப்படைத்தன்மையுடன் உ.பி காவல் துறை செயல்பட்டு, மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ல் முதல்வரானது முதல் யோகி, உ.பி.யின் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தி, குற்றச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். இதற்காக, நாட்டின் எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் பல புதுமையான முயற்சிகள் செயல்படுத்தி வருகிறார்.
இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி கூறியது: “மாநிலத்தில் குற்றவியல் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலையமைப்பு அமைப்பை (சிசிடிஎன்எஸ்) உ.பி அரசு திறம்படச் செயல்படுத்துகிறது. இதன் மூலம், குற்றவாளிகளின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம், வழக்கு நாட்குறிப்புகளின் டிஜிட்டல் குறியீட்டு முறை மற்றும் ஆன்லைன் கண்காணிப்பு ஆகியவை தொடர்கின்றன.
சாதாரண குடிமக்களின் வசதிக்காக, யுபிசிஓபி செயலி மிகவும் திறமையான முறையில் உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. இது, ஆன்லைன் முதல் தகவல் அறிக்கை, நன்னடத்தை சான்றிதழ்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த அறிக்கைகள் உட்பட 27-க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புறப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளன.
நம் காவல் துறை, வெறும் கைதுகளுடன் மட்டும் சுருக்கிக்கொள்ளாமல், விசாரணை, வழக்குத் தொடருதல் மற்றும் தண்டனை கண்காணிப்பு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், விசாரணை, வழக்குத் தொடருதல் மற்றும் தண்டனை வழங்கும் செயல்முறைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகின்றன.
ஜிபிஎஸ் வசதி கொண்ட ரோந்து வாகனங்கள், உடலில் அணியக்கூடிய கேமராக்கள், டிஜிட்டல் அழைப்பு மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பதில் அமைப்பு ஆகியவை அவசர அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. இது தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் காவல் துறைக்கு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
இந்த முயற்சிகள் மூலம் ஒரு பாதுகாப்பான உத்தரப் பிரதேசத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.