கூடைப்பந்து கம்பம் சரிந்து தேசிய அளவிலான வீரர் உயிரிழப்பு
ஹரியானாவில் கூடைப்பந்து கம்பம் சரிந்ததில் தேசிய அளவிலான வீரர் உயிரிழந்தார்.
ஹரியானாவின் ரோத்தக் நகரை சேர்ந்தவர் ஹர்திக் ரதி (16). தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர்.இவர் நேற்று முன்தினம் காலையில் தங்கள் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஒருமுறை மேலே எழும்பி கூடையின் விளிம்பை பற்றிய போது, கூடைப்பந்து கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. உடனே அருகில் இருந்த நண்பர்கள் ஹர்திக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஹர்திக் உயிரிழந்தார்.
கம்பத்தின் கூடை ஹர்திக்கின் மார்பில் மோதியதில் உள் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்ததாக அவரது உறவினர் கதக் சிங் ரதி கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கூடைப்பந்து கம்பம் துருப்பிடித்து இருந்தது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த சம்பவத்துக்கு ஹரியானா அரசும் விளையாட்டுத் துறையுமே பொறுப்பு. அவரது குடும்பத்துக்கு தற்போது ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை இனி நிகழாதவாறு ஹரியானா அரசு தடுக்க வேண்டும்” என்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதிகாரி ஒருவரை விளையாட்டுத் துறை அமைச்சர் கவுரவ் கவுதம் சஸ்பெண்ட் செய்துள்ளார். சேதம் அடைந்துள்ள விளையாட்டு மைதானங்களை உடனே சீரமைக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.