3-ம் உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்வோருக்கு நிரந்தரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு
3-ம் உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்வோருக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் ஆப்கானிஸ்தான் இளைஞர் 2 நாட்களுக்கு முன்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு வீரர் இறந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியவர் மிகப்பெரிய விலையை தரவேண்டி இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது. தாக்குதல் நடத்திய இளைஞர் கடந்த ஜோ பைடன் ஆட்சியில் 2021-ம் ஆண்டில் சரியான பரிசோதனை இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனிடையே அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்வோருக்கு நிரந்தரத் தடை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: முந்தைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம், லட்சக்கணக்கான மக்களை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததை நான் திரும்பப் பெற உள்ளேன். அமெரிக்காவுக்கு பயன்படாதோரும், அமெ ரிக்காவை நேசிக்க முடியாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் நான் நிறுத்தப்போகிறேன்.
மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர விரும்புவோருக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும். சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அங்கீகரிக்கப்படாத ஒப்புதல்கள் மூலம் அமெரிக்காவில் நுழைய இருப்பவர்களைத் தடுக்கவே இந்தத் தடை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள், தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகள் முதல் உலக நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ரஷ்யா, சீனாவை சார்ந்த நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்று கூறப்படுகின்றன.
இந்த 2 அணியிலும் இல்லாத, வளர்ந்து வரும் அல்லது பின்தங்கிய ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படுகின்றன.
தற்போதைய மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர், காங்கோ, கியூபா, எரித்திரியா, ஹைதி, வெனிசுலா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட சில நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.