‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்துக்கு சிறைச்சாலை செட்
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.பி.ஜெகன், எழுதி இயக்கும் படம், ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’. இதில் இடம்பெற்றுள்ள 3 கதைகளில் ஒரு கதையின் நாயகனாக அவர் நடித்துள்ளார்.
விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். இவர்களுடன் அருள்தாஸ், கதிரவன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்தோஷ், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, தியா என பலர் நடித்துள்ளனர். யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், எஸ்.கே.செல்வகுமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு ஆகிய இடங்களில் படமாக்கப் பட்டன. சென்னை ஏ.ஆர்.எஸ் கார்டனில் சிறைச்சாலை செட் அமைத்து, படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.