ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், பொதுமக்கள் புகாரளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 முதல் 18.01.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க வேண்டும்.
இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.