’ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

’ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகர் விஜய் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

'ஜனநாயகன்' படம் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியானது. அந்த வகையில் ட்ரைய்லரின் துவக்கத்திலேயே பல்வேறு விதமான ஆயுதங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், முதல் வசனமே ஒரு பெயரை அனுப்பி இருக்கிறேன், அவன் யார் என்று விசாரித்து சொல்லவும் என ஒருவர் கூறுகிறார்.

அதில் 'இன்ஸ்பெக்டர் பல்லாவரம் தளபதி வெற்றிகொண்டான்' என்கின்ற பெயரானது வாட்ஸ் அப் மூலம் தெரிய வருகிறது. முதல் வசனம் மூலமாக கேள்வி எழுப்பியவருக்கு பதில் கூறும் விதமாக, "சம்பவம் செய்யக்கூடிய நபரை கேள்விப்பட்டிருப்பீர்கள், சம்பவம் செய்வதில் ரெக்கார்ட் வைத்திருப்பவர்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என எதிரில் இருப்பவர் பதில் கூற, கையில் கோடாரி, துப்பாக்கி போன்றவை வைத்து எதிரிகளை விஜய் வீழ்த்துவது போல தொடக்க காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

ட்ரெய்லரின் விஜயின் முகம் காட்டக்கூடிய காட்சிகளில் இரண்டு யானைக்கு நடுவே தீப்பந்தத்துடன் இருள் சூழ்ந்த நிலையில் விஜயை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இவை அனைத்துமே தமிழக வெற்றிக் கழகத்தினை குறியீடுகளாக வைத்து இயக்குனர் வினோத் காட்சிப்படுத்தி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

குறிப்பாக ட்ரைலரில் ஒரு காட்சியில் இத்தனை பேரை அடித்து வீழ்த்தியிருக்கிறாய், அப்பொழுது நீ சூப்பர்மேனா? என ஒரு குழந்தை விஜய் இடம் கேட்க, அதற்கு விஜயோ நான் சாதாரண ஆள் தான், ஆனாலும் செய்யக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் சூப்பராக இருக்கும் என கூறும் விதமாக காட்சி அமைந்துள்ளது.

படத்தில் விஜயின் மகளாக வரும் மமிதா பைஜுவை வில்லன் ஒருவர் தாக்குவதை போன்றும், என் மகளை தாக்கியது யார்? என கையில் ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக விஜய் வசனம் பேசுவதை போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் வில்லன் மிகவும் கொடூரத்தனம் கொண்ட நபராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் இந்தியாவே தன்னுடைய காலடியில் விழும் என அவர் பேசுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாடல் காட்சிகளில் விஜய் காவல் உடை அணிந்து வருவதால், நிச்சயமாக இதில் விஜய் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், படத்தின் மற்ற கதாபாத்திரங்களான பிரகாஷ்ராஜ், சுனில், நரேன், பிரியாமணி ஆகியோரது கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தன்னுடைய மகளின் பயத்திற்கு பின்னால் ஏதோ ஒரு சம்பவம் ஒளிந்திருப்பதாகவும், அதனை கண்டறிந்தால் நாட்டையே காப்பாற்றலாம் என விஜய் பேசுவது போலவும் காட்சி உள்ளது.

அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் கொலை செய்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும், எதற்காக அரசியலுக்கு வருகிறீர்கள் என கையில் சாட்டையை சுழற்றியவாறு விஜய் பேசி இருப்பது போல ட்ரைலர் முடிகிறது. இந்த படம் வரும் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.