கூட்டணி குறித்த கருத்தை டில்லி தலைவர்களிடம் கூறுங்கள்: காங்கிரசாருக்கு கிரிஷ் சோடங்கர் உத்தரவு

கூட்டணி குறித்த கருத்தை டில்லி தலைவர்களிடம் கூறுங்கள்: காங்கிரசாருக்கு கிரிஷ் சோடங்கர் உத்தரவு

''சோனியா, ராகுல், கார்கே போன்றோரை சந்திக்க, அனுமதி வாங்கி தருகிறேன். அவர்களிடம், தேர்தல் கூட்டணி தொடர்பாக, உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் கோரிக்கையை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் அழகிரி, திருநாவுக்கரசர், எம்.பி.,க்கள் மாணிக்தாகூர், கார்த்தி, விஜய் வசந்த், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் போன்றோர், வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை யில், காங்., தலைமைஅலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் பெயர் அளவிற்கே உள்ளது. அந்த அளவுக்குத்தான், தி.மு.க.,வும் காங்கிரசை நடத்துகிறது. தமிழகத்தில் தி.மு.க., தனித்து ஆட்சி நடத்துகிறது; அதனால், கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

'நம் எம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை இல்லை. அமைச்சர்களிடம் தொகுதி மேம்பாடு குறித்த வேலைகள் நடப்பதில்லை. முக்கிய துறைகளை தி.மு.க.,தான் கையாளுகிறது. தி.மு.க., அரசின் பெரும்பாலான முடிவுகளில், அக்கட்சியின் ஆதிக்கமே காணப்படுகிறது. இதனால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவே கருதுகிறோம்' என, வெளிப்படையாக புகார் தெரிவித்தனர்.

அவர்களின் குறைகளை கேட்ட பின், கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'இப்போது தான் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறீர்கள். ஏற்கனவே பல முறை தமிழகம் வந்து உங்களை சந்தித்துள்ளேன். அப்போது, எதுவும் சொல்லாமல் இருந்து விட்டு, தோண்டித் துருவி எல்லாவற்றையும் நான் கேட்டபின் ஒவ்வொரு விஷயமாக சொல்கிறீர்கள்.

'கூட்டணி குறித்து இனி யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம். ஒவ்வொருவருக்கும் உள்ள கருத்தை சோனியா, ராகுல், கார்கே ஆகியோரிடம் சொல்லுங்கள். அதற்காக, டில்லிக்கு வாருங்கள்; நானே அவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கித் தருகிறேன். அவர்களும் உங்கள் கருத்தை கேட்கட்டும்.

' அதன்பின், அவர்கள் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கட்டும். அந்த முடிவை அனைவரும் ஏற்க வேண்டும். அதுவரை, அமைதியாகவே இருங்கள்' என கூறினார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.