விஜய் விவகாரத்தில் செல்வப்பெருந்தகையை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் நெருக்கடி ஆகியவை மூலம் பாஜக நெருக்கடி கொடுப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புகார் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்ததை ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அரசு மருத்துவமனையில் கொலை நடப்பது கவலையளிக்கிறது. சைதாப்பேட்டையில் கடந்த வருடம் மருத்துவமனைக்குள் ஒரு மருத்துவரை தாக்கினார்கள். அப்போதே அதிரடி நடவடிக்கைகள் எடுப்பது போல நாடகமாடினார்கள். ஏன் இப்போது மக்களை பாதுகாக்க முடியவில்லை. மருத்துவர்கள் தங்களின் உரிமைக்காக போராடி வருகிறார்கள்.
அங்கன்வாடி ஊழியர்களும் போராடி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு போராட்டக்களமாகியுள்ளது. திருப்பரங்குன்றம் போகலாம் என உயர் நீதிமன்றமே சொல்லிவிட்டது. அங்கு மாற்று மதத்தினர் போவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் இந்துக்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது கண்டிக்கத்தக்கது. பொங்கல் பண்டிகைக்கான அரசு உரிய போக்குவரத்து வசதி செய்யவில்லை.
செல்வப்பெருந்தகை வேறு என்ன சொல்வார். அவர்கள் கட்சி தான் தெலங்கானாவில் ஆட்சியில் உள்ளது. தெலங்கானா முதலமைச்சர் ஒரு நடிகரின் படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் கூட்டம் வந்தபோது அதற்கு அந்த நடிகரை கைது செய்தார். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி இன்று பாஜக பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
செல்வப்பெருந்தகை குளிர்காய நினைக்கிறார்
தனது கட்சிக்குள்ளேயே செல்வப்பெருந்தகைக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அதனால் அவருக்கு ஏதாவது சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தலைவர் என்பதற்காக எதையாவது பதிவு செய்து வருகிறார். ஏன் இதை விஜய்யோ, அவரின் ஆதரவாளர்களோ, ரசிகர்களோ கூட சொல்லவில்லை. செல்வப்பெருந்தகை இதற்கு இடையில் புகுந்து குளிர் காய நினைக்கிறார்.
விஜய் திரைத்துறையிலும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். அவர் எந்த திசையில் செல்வார் என்பது நமக்கு தெரியாது. இப்போது சிபிஐ பக்கம் போயிருக்கிறார். அவ்வளவுதான் நமக்கு தெரியும். மற்றவை எதுவும் நம் கையில் இல்லை. எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றார்.