வைரமுத்து மீது காலணி வீச்சு - திருப்பூரில் பரபரப்பு
கவிஞர் வைரமுத்துவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது கூட்டத்திலிருந்து செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விழா நடைபெறும் இடத்திற்கு வழக்கறிஞர்கள் வைரமுத்துவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்மணியை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது எந்த கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி அடிக்கடி இதுபோன்று போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூருக்கு வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் சங்கத்தினர், பொன்னாடை போட்டு, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது திடீரென கூட்டத்தின் மீது எங்கிருந்தோ ஒருவர் செருப்பை வீசியுள்ளார். நல்வாய்ப்பாக அந்த செருப்பானது வைரமுத்துவின் மீது படாமல் தள்ளி விழுந்தது. இதனால் அங்கு கூடியிருந்தவர் மத்தியில் பரபரப்பும் குழப்பமும் நிலவியது.
யார் செருப்பை வீசியது என்று விசாரித்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தான் தனது செருப்பை வீசியது தெரியவந்தது. இதனால் உடனடியாக அந்த பெண்ணை அந்த பகுதியிலிருந்தே போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து வைரமுத்துவை வழக்கறிஞர்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.