'1,074 கிலோ தங்கம்... ஆண்டிற்கு ரூ.17 கோடி வருவாய்' - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

'1,074 கிலோ தங்கம்... ஆண்டிற்கு ரூ.17 கோடி வருவாய்' - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

அரசின் தங்க முதலீடு திட்டத்தின் மூலம் இதுவரை 1,074 கிலோ தங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.28 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ.12 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ரூ.16 கோடி உபயதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஆன்மீகவாதிகளில் பொற்காலம் எனப் போற்றுகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோயில்களை கணக்கெடுத்து, இதுவரை 3,707 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மேலும், ''மன்னர்கள் விட்டு சென்ற திருக்கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் 844 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் சேர்த்து 65% நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசின் முக்கிய திட்டமான தங்க முதலீடு திட்டத்தின் மூலம், இறைவனுக்குத் தேவைப்படாத பலமாற்றுப் நகைகளை உருக்கி, மத்திய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலைக்கு அனுப்பி வைத்து, இதுவரை 1,074 கிலோ தங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 17 கோடி வைப்பு நிதி வருவாயாக பெறப்படுகிறது.

தற்போது நான்கு திருக்கோயில்களில் இருந்து 53 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 18 கோயில்களில் இருந்து 308 கிலோ தங்கம் இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17 கோடி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. உபயதாரர்களிடமிருந்து இந்த ஆட்சியில் சுமார் ரூ. 1,512 கோடி நிதி வந்துள்ளது.

இது வேறு எந்த ஆட்சியிலும் வரவில்லை. காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களுக்கான மதிப்பை அவர்களே குறைத்துக்கொள்வதாக உள்ளது.

இது இந்து அறநிலையத் துறைக்கு இழுக்கான சூழலை ஏற்படுத்தவில்லை, அவர்களுக்குத் தான் இழுக்கான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரச்சினை செய்யாமல் இரு பிரிவினரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை'' என தெரிவித்தார்.