தீபாவளி பண்டிகை எதிரொலி: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்? அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த புங்கங்குடி ஊராட்சியில் அரியலூர் - சுண்டக்குடி வழித்தடத்தில் அரசு பஸ் இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த பேருந்து சேவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஆதனூர் வரை புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து இயக்கத்தினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ''கடந்த ஆண்டு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு சார்பில் கட்டண விகிதத்தை அறிவித்தோம். கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பயணம் செய்தனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்பதிவில் 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
எனவே இந்த ஆம்னி பேருந்து நிறுவனங்கள் நாளைக்குள் கட்டணைத்தை குறைக்காவிட்டால் அந்த பேருந்துகள் மீது தீபாவளிக்கு முன்பாகவே கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள். சொந்தமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லாதவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி சேவையை பயன்படுத்துவார்கள்.
வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.