வங்கிகள் இனி இவர்களுக்கு கடன் தரக்கூடாது.. ரிசர்வ் வங்கி போட்ட கிடுக்குப்பிடி உத்தரவு

ஒரு வங்கியின் இயக்குநர்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது உறவினர்களுக்கு அதேவங்கியில் அதிகளவில் கடன் வழங்குவதாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் பறந்தன. இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த ரிசர்வ் வங்கி அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இதன்படி, வங்கி இயக்குநர்களின் உறவினர்களுக்கு அதே வங்கியில் கடன் கொடுக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் வங்கி இயக்குநர்களின் உறவினர்களுக்கு கடன் வழங்கும் முறையிலும் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.50 கோடி வரை மட்டுமே கடன் தர முடியும் என்றும், ஒன்று முதல் ரூ.10 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள நடுத்தர வங்கிகள் அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை தான் இனி கடன் தர முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடைமுறைகளை ரிசர்வ் வங்கி காலத்திற்கு தகுந்தாற் போல் பின்பற்ற உத்தரவிட்டு வருகிறது. இப்போது வங்கியின் இயக்குனர்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது உறவினர்களுக்கு அதேவங்கியில் அதிகளவில் கடன் வழங்குவதாக புகார்கள் உள்ள. அந்த கடன்கள் தான் பெரும்பாலும் வாராக்கடன் ஆகி பொதுமக்களின் பணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக புகார்கள் உள்ளது. அதாவது நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத அளவிற்கு கடன்களை விதிமுறைகளை மீறி வழங்கிவிடுவதால், அதனை திரும்ப பெற முடியாமல் வங்கிகள் திணறுவது நடக்கிறது. எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி ஒரு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை அடுத்தாண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவு விதிகளின் படி, நாட்டில் வங்கியின் இயக்குநர்கள், புரமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வங்கியில் 5 சதவீத பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆகியோர், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு, தாங்கள் பணிபுரியும் வங்கியில் கடன் வழங்கக்கூடாது. அப்படியே கடன் வழங்கினாலும், சில நிபந்தனைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தால் அது தொடர்பான முடிவெடுக்கும் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. மேலும் ஜாமீன், கடன் தள்ளுபடி, மீட்பு, வாராக்கடன் தீர்வு போன்ற எந்தப் பணிகளிலும் அவர்கள் பங்கேற்கக்கூடாது.
அவர்களுக்கு கடன் வழங்குவதற்கும் உச்சவரம்பு இனி நிர்யணம் செய்யப்படுகிறது. அதன்படி 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.50 கோடி வரை மட்டுமே கடன் தர வேண்டு. அதேபோல் ஒன்று முதல் ரூ.10 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள நடுத்தர வங்கிகள் அதிகபட்சமாக ரூ.10 கோடியும். ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள சிறிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.5 கோடியும். உள்ளூர் வங்கிகள் மற்றும் மத்திய-மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடியும், என்பிஎப்சிகள் ரூ.10 கோடி வரையும் மற்ற அனைத்து நிதி நிறுவனங்கள் ஆகியவை ரூ.50 கோடி வரையும் கடன் கொடுக்கலாம்.
இப்படி வழங்கப்படும் கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு அவர்கள் தகவல் கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்கு கடன் விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும். வங்கிகள் ஆண்டுதோறும் தங்களது நிதி அறிக்கைகளில் எவ்வளவு கடன் தொடர்புடையவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அவற்றில் எவ்வளவு கடன் வாராக்கடன் நிலைக்கு சென்றது என்பதனை வெளிப்படையாக வெளியிட வேண்டும். இந்த விதிகளை மீறினால் வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும்.
தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுத்தொகையை ஒதுக்கீடாக வைத்திருப்பதை கட்டாயப்படுத்தும். மேலும் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடன் ஜாமீன் வழங்கவே கூடாது. இந்த கட்டுப்பாடுகள் வங்கியின் நிர்வாகிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மட்டும் பொருந்தும். பொதுமக்கள் எடுக்கும் வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கு இந்த வரம்புகள் எதுவும் பொருந்தாது" இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.