மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம்

வேல்ஸ் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியின் போது மைதானத்துக்குள் எலி நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமானது.
வேல்ஸ் நாட்டின் கார்டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் வேல்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது திடீரென கோல் கீப்பர் திபோ கோர்டோயிஸ் பகுதியின் அருகே எலி ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது.
இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. எலியை, திபோ கோர்டோயிஸ் கையால் பிடிக்க முயன்றார். ஆனால் அவரிடம் இருந்து எலி தப்பி துள்ளி துள்ளி ஓடியது. இறுதியாக வேல்ஸ் அணியின் முன்கள வீரரான பெர்னன் ஜாண்சன் சைடுலைனை நோக்கி எலியை வெளியே விரட்டினார். இதன் பின்னர் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் அணி தரப்பில் கெவின் டி ப்ரூய்ன் 2 கோல்களும் (18, 76-வது நிமிடங்கள்), தாமஸ் மியூனியர் (24-வது நிமிடம்) லியாண்ட்ரோ ட்ராசார்ட் (90-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். வேல்ஸ் அணி சார்பில் ஜோ ரோடன் (8-வது நிமிடம்), நேதன் பிராட்ஹெட் (89-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.