ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் தொடரும் - உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்ட அறிவிப்பு

ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் தொடரும் - உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்ட அறிவிப்பு

தமிழ்நாடு-கேரளா இடையே ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் தொடரும் என அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'கேரளா மாநிலத்திற்கு கடந்த 7 ஆம் தேதி சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற 30 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு ரூ.70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த ஏழு நாட்களாக கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது.

இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள். எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக ஆபரேட்டர்கள் இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம்.

இந்த நிகழ்வை தொடர்ந்து. தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு இயக்கப்பட்டு லந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கடந்த 7 ஆம் தேதி முதல் இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் 2 மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்து, தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'மாநிலங்களுக்கு இடையே இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு (90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூபாய்.1,50,000, AITP சாலை வரி ரூபாய்.90,000 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூபாய் 4,50,000 செலுத்தியும் பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதுகுறித்து நேற்று (நவம்பர் 10) போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து இப்பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை வைத்தோம். அமைச்சர் அரசுடன் பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் இன்று (நவம்பர் 11) போக்குவரத்து ஆணையரை சந்தித்து இந்த பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை வைத்தோம். ஆணையரும் அரசிடம் பேசி நல்ல முடிவு சொல்வதாக தெரிவித்தார்.

அடுத்து வரும் வாரங்களில் கேரளாவிற்கு தினசரி 300 பேருந்துகளுக்கு மேல் சபரிமலைக்கு செல்ல இருப்பதால் தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விரைவாக மாநிலங்களுக்கிடையே ஆம்னி பேருந்து சேவையை தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக முதல்வர் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா அரசுடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கும் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில் எங்களது வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை நிறுத்தம் தொடரும்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.