இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளின் முடிவில் 2-0 என நியூஸிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று வெலிங்டனில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியில் முதல் 4 வீரர்களான ஜேமி ஸ்மித் 5, டக்கெட் 8, ரூட் 2, ஹாரி புரூக் 6 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஜேமி ஓவர்டன் சற்று தாக்குப்பிடித்து விளையாடி 68 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.நியூஸிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 44.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. டேவன் கான்வே 34, ரச்சின் ரவீந்திரா 46, வில் யங் 1, டேரில் மிட்செல் 44, டாம் லேதம் 10, மைக்கேல் பிரேஸ்வெல் 13, மிட்செல் சாண்ட்னர் 27, நேதன் ஸ்மித் 2 ரன்கள் எடுத்தனர்.
ஆட்டநாயகன்: கடைசி நேரத்தில் ஜகாரி பவுல்க்ஸ் 14 ரன்களும், பிளேர் டிக்னர் 18 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இதையடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக பிளேர் டிக்னரும், தொடர்நாயகனாக டேரில் மிட்செலும் தேர்வு செய்யப்பட்டனர்.