மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு

மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று மொசாம்பிக். இங்கு ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள பெய்ரா துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை ஒரு படகு புறப்பட்டது.
துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல அந்த படகு சென்றது. செல்லும் வழியில் அந்தப் படகு கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில் இருந்த 9 பேரும் மூழ்கினர். இந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
கடலில் விழுந்த 6 பேர் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். மொசாம்பிக்கில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.