தமிழகத்துடன் இணைந்து தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுகிறோம் - கர்நாடக அமைச்சர் பங்காரப்பா

தமிழகத்துடன் இணைந்து தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுகிறோம் - கர்நாடக அமைச்சர் பங்காரப்பா

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாட்டை போன்று தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிலும் புத்தகக் காட்சி, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், திமுக எம்பி கனிமொழி, கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சார்பாக துறையின் செயலாளர் வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இந்த சர்வதேச புத்தகக் காட்சியில் 102-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் தங்களின் பங்கேற்பை உறுதி செய்துள்ளனர். தமிழ் நாட்டை சேர்ந்த 90 பதிப்பாளர்கள் உள்நாட்டு பங்கேற்பில் இடம்பெறவுள்ளனர். கேரளா, டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 42 பதிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாடு அரசால் பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்ட 28 இலக்கிய முகவர்கள் இதில் இடம்பெறுகின்றனர். இந்தாண்டு பன்னாட்டு புத்தக காட்சியில் 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பரிமாறிக்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழாவில் தலைமை உரையாற்றைய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி, ''ஒரு மனிதனின் உலகம், வாழ்க்கை என அனைத்தையும் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மனிதர்களிடம் உள்ள மதம், இனம் போன்ற தடைகளை உடைப்பது தான் இலக்கியம். இந்த புத்தக‌க் காட்சி உலகத்தின் வாழ்க்கை, போராட்டம், அடையாளம் என அனைத்தையும் புரிந்து கொள்ள உதவும்‌'' என‌ தெரிவித்தார்.

கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பேசும் போது, ''இலக்கியத்திற்கும், எழுத்திற்கும் எல்லையே கிடையாது. சென்னை பன்னாட்டு புத்தக காட்சியை போலவே கர்நாடகாவிலும் சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கவுள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். இதற்கு அனுபவம் வாய்ந்த தமிழ்நாடு அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

கர்நாடகாவில் கிராமப்புறங்களில் சுமார் 5,000 நூலகங்களை அமைத்திருக்கிறோம். இதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். தினமும் ஒரு கோடி பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு முகவுரையை படிக்கிறார்கள். இருமொழிக் கல்வியை பின்பற்றி வருகிறோம். தமிழ், மலையாளம், மராத்தி உள்ளிட்ட அதிகம் பேசக்கூடிய மொழிகள் எங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா, ''மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டை போல கர்நாடகமும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்களுக்கென்று தனியான கலாச்சாரம், மொழி, பண்பாடு இருக்கிறது. நாங்கள் எங்கள் தாய் மொழியை மதிக்கிறோம், எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களிடம் மாநில கல்விக் கொள்கை உள்ளதால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. தமிழ்நாட்டை போல கர்நாடகத்திற்கும் கல்வி நிதி தர மத்திய அரசு பாகுபாடு காட்டி வருகிறது. அதற்கும் தமிழ்நாடுடன் சேர்ந்து போராடி வருகிறோம்'' என்றார்.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது குறித்தான கேள்விக்கு, ''மத்திய அமைச்சர் தான் குழப்பத்தில் இருக்கிறார். மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு தெரிந்த ஒரே மொழி மோடியின் மொழி. அதுதான் பிரச்சனை'' என பங்காரப்பா பதிலளித்தார்.

இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்தகக் காட்சியில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுத்தாளர்கள் உரையாற்றும் கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன.