“தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை!” - மகளிர் காங். தலைவர் ஹசீனா சையத் கொதிப்பு
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தங்களின் கூட்டணி தலைமையான திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை என்றொரு குண்டைத் தூக்கி வீசி இருக்கிறார் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியிலிருந்து...
தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் ஹசீனாவுக்கும் என்ன திடீர் பிரச்சினை?
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தியின் நினைவஞ்சலி கூட்டம் அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழில் எனது பெயர் உட்பட மகளிர் காங்கிரஸார் யார் பெயரும் இடம்பெறவில்லை. இதுகுறித்து கட்சி நிர்வாகத்தில் கேட்டதற்கு, “நீங்கள் வேண்டுமானால் தனியாக கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள்” என்றனர். அதனால் நான் தனியாக நினைவஞ்சலி கூட்டம் நடத்தினேன்.
தமிழக காங்கிரஸ் தலைமை என்ன வேலை கொடுத்தாலும் நாங்கள் சிறப்பாகச் செய்கிறோம். வாக்கு திருட்டுக்கு எதிராக 3 லட்சம் கையெழுத்துகளை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். திருநெல்வேலி மாநாட்டுக்கு 5 ஆயிரம் பேரை அழைத்து வரச் சொன்னார்கள். நாங்கள் 7 ஆயிரம் பேரை அழைத்துச் சென்றோம்.
இத்தனை சிறப்பாக நாங்கள் செயல்பட்டாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள சிலர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேடையில் மகளிர் காங்கிரஸூக்கு இருக்கை கூட ஒதுக்குவதில்லை. திருநெல்வேலி மாநாட்டில்கூட எனக்கு மேடையில் இடமில்லை. இதுபற்றி தலைமைக்கும், மேலிட பொறுப்பாளருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
காங்கிரஸிலிருந்து விலகிய விஜயதரணி சொன்னது போல் தமிழ்நாடு காங்கிரஸில் மகளிருக்கு முக்கியத்துவ தரப்படுவதில்லை என்கிறீர்களா?
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்திரா காந்தி மகளிர் காங்கிரஸை தோற்றுவித்தார். குஷ்பு, விஜயதரணி போன்றவர்கள் எல்லாம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினர். நான் இன்னும் வார்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. அவர்கள் பிரச்சினையும், என் பிரச்சினையும் ஒன்று இல்லை. சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் திராவிட கட்சிகளை நோக்கி சென்றிருப்போம். கட்சி, கொள்கை, கோட்பாடுக்காக தான் நாங்கள் காங்கிரஸில் இருக்கிறோம். ஆனால் இங்கு மகளிருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை.
மகளிர் காங்கிரஸுக்கு புது ரத்தம் பாய்ச்ச திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
மகளிர் காங்கிரஸில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என படித்தவர்கள் மாவட்ட தலைவிகளாக உள்ளனர். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட தலைவியாக உள்ளனர். அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். வரும் நவம்பர் 14-ல் அவர்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சியும் வழங்க இருக்கிறோம். அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்க இருக்கிறோம்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் மகளிரணிக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?
மகளிருகு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸின் கொள்கை மற்றும் கோட்பாடு. அதனால் தமிழக காங்கிரஸில் 2026 தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை பெற்றே தீருவேன். வாரிசு அரசியலை ஓரங்கட்டிவிட்டு, உழைக்கும் மகளிருக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அகில இந்திய தலைமையை வலியுறுத்துவேன்.
தமிழகத்தில் ஒரு பக்கம் காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது... இன்னொரு பக்கம் பாஜக வளர்ந்து கொண்டே வருகிறதே..?
அரசியலில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். கடந்த தேர்தலில் வாங்கிய இடங்களை விட அதிக இடங்களை வாங்க இந்த தேர்தலில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் தலைமை எடுக்கும். 4 எம்எல்ஏ-க்களை பெற்றுள்ள பாஜக தமிழகத்துக்கு என்ன செய்துவிட்டார்கள்? பாஜக தேசிய மகளிர் அணி தலைவியாக இருக்கும் வானதி சீனிவாசன் தமிழகத்தில் பெண்கள் பிரச்சினைகளுக்காக போராடியதுண்டா?
2026 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் எந்தக் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கிறீர்கள்?
நிச்சயமாக திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தான் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும். தமிழக மக்கள் மதவாதத்தை எதிர்ப்பவர்கள். சகோதரத்துவத்தை விரும்புபவர்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் இது நாள் வரை அதிமுகவை ஆதரித்த சிறுபான்மையினர் கூட இம்முறை திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பார்கள்.
திராவிடக் கட்சிகளில் எந்தக் கட்சி காங்கிரஸை உரிய மரியாதையுடன் நடத்துவதாக நினைக்கிறீர்கள்?
திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸாருக்கு உரிய மரியாதை அளிக்கிறார். ஆனால், கீழ்மட்டத்தில் அப்படி இல்லை. எனக்கு நேரடி அனுபவங்கள் இல்லை என்றாலும் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்கு கீழ் மட்டத்தில் உள்ள திமுகவினர் உரிய மரியாதை அளிக்கவில்லை என்கின்றனர். இதற்கு அதிமுகவினர் எவ்வளவோ பரவாயில்லை என்றும் கருத்துகளை பகிர்கிறார்கள்.
திராவிட மாடல் அரசு குறித்து காங்கிரஸ்காரராக உங்களின் மதிப்பீடு என்ன?
தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினும் சகோதர மனப்பான்மையுடன் பழகி வருகின்றனர். திமுக அரசு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது.