நடைமேடைகளில் உள்ள இடைவெளியை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ரயில்வே வாரியம் பதிலளிக்க உத்தரவு

நடைமேடைகளில் உள்ள இடைவெளியை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ரயில்வே வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரயில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் நடைமேடைகளில் உள்ள இடைவெளியை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பது குறித்து ரயில்வே வாரியம் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஜஹாங்கீர் பாதுஷா தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் போக்குவரத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படும் துறை ரயில்வே துறை. இந்நிலையில் ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடையும், ரயிலுக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளதால், அதில் ரயில் பயணிகள் சிக்கி அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பலர் கை, கால்களை இழந்துள்ளனர்.

இந்தியாவில் 2022 மார்ச் மாதம் கணக்கெடுப்பின்படி, ரயில்மேடை இடைவெளியில் சிக்கி மட்டும் சுமார் 41,596 பேர் உயிரிழந்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், ரயில்வே பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயிலுக்கும் நடைமேடையில் உள்ள இடைவெளியில் சிக்கி மட்டும் 39,015 பயணிகள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதே போல, ரயில் நடைமேடைகளில் சிக்கியவர்களை மீட்கும் காட்சிகளும், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளைப் போல், அனைத்து சாதாரண ரயில் நிலையங்களிலும் உள்ள நடைமேடைகளின் இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதற்கட்டமாக பயணிகளை அதிகம் கையாளும், முக்கிய ரயில் நிலையங்களில் இந்த சீரமைப்பைத் தொடங்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு பலமுறை மனு கொடுத்துள்ளேன். ரயில்வே நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாதாரண ரயில் நிலையங்களில் நடைமேடையை, மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையை போல் சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாருன் ரசீத், “வேகமாக ரயிலில் ஏற முயலும் போது, நடைமேடைகளில் உள்ள இந்த இடைவெளியில் சிக்கி பலர் உயிரிழக்கக் கூடிய காட்சிகளை பார்க்க முடிகிறது. எனவே டெல்லி, சென்னை பெருநகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் போல் இதனையும் மாற்ற வேண்டும்” என வாதிட்டார்.

தொடர்ந்து, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரம் ஒன்றிய அரசின் கொள்கைரீதியான விவகாரம். இதில் மனுதாரர் நிவாரணம் கூற முடியாது” என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், “இடைவெளியில் சிக்கி பல்லாயிரம் பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்பதை சாதாரணமாக ஏற்க முடியாது. உயிரிழந்தவர்கள் சாதாரண பொதுமக்களே. எனவே, அந்த நடவடிக்கை ரயில்வே நிர்வாகத்தின் கொள்கை முடிவாக ஏற்க முடியாது. அதனால், இந்த வழக்கில் இந்தியன் ரயில்வே வாரியத்தை எதிர் மனுதாரராக சேர்க்கிறோம். இந்த விவகாரத்தில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பதை இந்திய ரயில்வே வாரியம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.